அபிவிருத்தியடைந்த நாடுகள் யாவும் தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கை மற்றும் வரைவின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இலங்கைக்கான தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையும் வரைவும் உருவாக்கப்பட்ட வேண்டிய அவசியம் 1997ஆம் ஆண்டு உணரப்பட்டது. 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நாடு நகர திட்டமிடல் கட்டளைச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம், நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள இந்த தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் 2000ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
தேசிய பௌதீக திட்டவரைவின் பிரதான குறிக்கோள் யாதெனில், சுற்றாடலை பாதுகாத்தலும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்கள் ஆகக்குறைவாகவுள்ள இடங்களில் குடியிருப்புக்களை அமைத்தலுமே ஆகும். தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையையும் தேசிய பௌதீக திட்டவரைவையும் தயாரிப்பது இத்திணைக்களத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இவைகள் தயாரிக்கப்பட்டு 2007 ஜுலை 3ஆம் திகதி மேதகு ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இக்கொள்கையினுள், இயற்கை அனர்த்தங்களை தவிர்க்கும் விதமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு பாங்கு, அபிவிருத்திக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட முறையாக திட்டமிடப்பட்ட நகர்ப்புற பிரதேச வலையமைப்பு, நகர மற்றும் கிராமிய பிரிவுகளை உரியமுறையில் ஒருங்கிணைக்கத்தக்க விதத்தில் சேவைகளை வழங்குகின்ற சிறிய புறநகரங்களின் வலையமைப்பு ஆகியன உள்ளடங்கியிருக்கும்.
சுற்றாடல் ரீதியில் மிகுந்த கூர்ந்துணர்வான பிரதேசங்கள், காடுகள், வனவிலங்குகள், தொல்பொருள் ஆய்வுப்பகுதிகள் ஆகியன காணப்படும் பிரதேசங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்ட அதே நேரம், பல்வேறு வகையான விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்குரிய பரிந்துரைகளும் தெரிவிக்கப்பட்டன. கட்டமைப்பு திட்டவரைவின் பிரதான கூறுகளில், மாநகரங்களை கொண்ட மாநகர பிராந்தியங்கள், மாவட்ட தலைநகரங்கள், பிரதான நெடுஞ்சாலைகள், பிரதான ரயில் பாதைகள், கப்பல் துறைமுகங்கள், விமான இறங்குதுறைகள், பிரதான மீன்பிடி துறைமுகம், மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியன அடங்குகின்றன.
சமுதாயங்களிடையே இனரீதீயில் ஒற்றுமை, நாட்டிற்கு பொருத்தமான காணிப்பயன்பாட்டு பாங்கு, பிராந்தியங்களுக்கு இடையில் விரைவான இயக்கப்பாடு, பிராந்தியங்களுக்குள் பொருத்தமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு வழிகாட்டியாக விளங்கும் இக்கட்டமைப்பு திட்டவரைவு நாட்டிலுள்ள பிராந்திய, சமூக, பொருளாதார சமத்துவமின்மையை குறைக்கவும் செய்கிறது.
இத்திணைக்களத்தின் முக்கிய பணிகளில் இன்னொன்று, தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கை மற்றும் வரைவின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, மாகாணங்களுக்குரிய பிராந்திய திட்டவரைவுகளை தயாரித்தலாகும். தற்போது, கிழக்கு மற்றும் சபரகமுவ ஆகிய இரு மாகாணங்களுக்கான பிராந்திய தேசிய பௌதீக திட்டவரைவுகள் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. வடமேல், தென், வடமத்திய, மேல், மத்திய, ஊவா, வட மாகாணங்களுக்கான திட்டவரைவுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இக்கொள்கையையும் வரைவையும் 2030ஆம் ஆண்டு வரைக்குமான பௌதீக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பயன்படுத்த முடியும்.